Published : 23 Dec 2019 12:40 PM
Last Updated : 23 Dec 2019 12:40 PM

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் பதிவு: அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிலுள்ள அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட காளைகளை கால்நடை வளர்ப்போர் மருத்துவமனைக்கு அழைத்துவந்து பதிவு செய்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டு காளை மாடுகளின் உயரம், கொம்புகளின் இடைவெளி, வலதுகண் ஆகியவை புகைப்படம் எடுக்கப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட காளைகள் அடங்கிய தொகுப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு கால்நடை துறை சார்பாக ஒருங்கிணைக்கப்படுகிறது.

இதன்மூலம் ஜல்லிக்கட்டு மாடுகள் குறித்த மொத்த விவரம். எந்தெந்த வகை இனங்கள் உள்ளன ஆகியவை கணக்கெடுகப்படுகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள காளைகளுக்கு குறைந்தபட்சம் 3 வயதும், உயரம் 120 சென்டி மீட்டர் இருத்தல் அவசியம்.

தனி மென்பொருள் உருவாக்கம்..

தமிழரின் வீரம், பண்பாடு, கலாச்சார அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற இருக்கிறது.

இதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. இப்போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை குவிவார்கள்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளைப் பதிவு செய்வதற்காக கால்நடை பராமரிப்புத் துறை தனி இணைய மென்பொருள் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில், ஜல்லிக்கட்டு காளையின் இனம், வயது, உயரம், நிறம், கொம்பின் இடைவெளி, வலது கண்ணின் கருவிழித்திரை புகைப்படம் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் பெயர், முகவரி, ஆதார் கார்டு மற்றும் தகவல் தொடர்புகொள்ள அலைபேசி எண் ஆகியவற்றை இணைத்துப் பதிவு செய்யப்படுகிறது.

காளை விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் முடிந்ததும், அந்தத் தரவுகளை ஆய்வு செய்து காளைகள் எண்ணிக்கை தெரிய வந்த பிறகு இணையதளத்தில் காளைகள் விவரம் வெளியிடப்படும்.

அதன்பிறகு ஒவ்வொரு ஊரிலும் எத்தனை காளைகள் இருக்கின்றன, அவை எந்த இனத்தைச் சார்ந்தவை என்ற விவரம் தெரியவரும்.
கைரேகையை விட கருவிழிப் புகைப்படம் தனித்துவம் வாய்ந்தது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வரும்போது அந்தக் காளையைஅடையாளம் கண்டுபிடிக்க இயலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x