Published : 23 Dec 2019 08:42 AM
Last Updated : 23 Dec 2019 08:42 AM

வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.

திருச்சி அருகே உள்ள சத்திரப்பட்டி பெரியநாயகி சத்திரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(54), இவரது தாய் ஒப்பாயி(70), மகன் குணசேகரன்(23). இவர்களுக்கு நவலூர் குட்டப்பட்டு அருகே கீழக்காட்டில் சொந்தமாக வயல் உள்ளது. நெல் பயிரிட்டுள்ள நிலையில், நேற்று பிற்பகல் 3 பேரும் வயலுக்கு உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக சென்றமின் கம்பி அறுந்து வயலில் விழுந்துகிடந்துள்ளது. அப்போது, இதையறியாமல் உரமிட்டுக் கொண்டிருந்த ராமமூர்த்தி மின்கம்பியை மிதித்துள்ளார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக ஒப்பாயியும், குணசேகரனும் வயலுக்குள் இறங்கியதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்த ராம்ஜிநகர் போலீஸார் மற்றும் மின் துறையினர் அங்கு சென்று மின் விநியோகத்தை துண்டித்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கீழக்காடு பகுதியில் மின்கம்பிகள் ஆபத்தான முறையில் மிகவும் தாழ்வாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இந்தப் பகுதியில் மிகவும் தாழ்வாக இருக்கும் மின் கம்பிகளை உயர்த்திக் கட்டவும், தேவையான இடங்களில் மின் கம்பங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக மின் வாரிய வட்டாரங்களில் விசாரித்தபோது, “மின் கம்பிகள் அறுந்து விழுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கீழக்காடு பகுதியில் தாழ்வாக இருக்கும் மின் கம்பிகளை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x