Published : 23 Dec 2019 08:02 AM
Last Updated : 23 Dec 2019 08:02 AM

நாட்டு வெடிகுண்டு வீசி 2 பேர் கொல்லப்பட்ட வழக்கு: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் 3 பேர் கைது

திருவள்ளூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் 3 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம், பூக்கடை சத்திரத்தைச் சேர்ந்த கோபி(25), ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த ஜீவா(25) ஆகிய இருவர் நேற்று முன்தினம் காலை, திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில், பன்னூர் பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல், கோபி, ஜீவா மீது நாட்டு வெடிகுண்டுகளை விசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு, பிடிக்க முயன்ற பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடியது.

இதுகுறித்து, மப்பேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த, கிளார் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(24), தாமல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(22), வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்(23) ஆகிய 3 ரவுடிகளை நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடிகள் தணிகாசலத்துக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டியில், தினேஷ் கூட்டாளிகளில் ஒருவரான சதீஷ்குமார், சமீபத்தில் செய்யாறில் ஓடும் பஸ்ஸில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கவே, தணிகாசலம் கூட்டாளிகளான கோபி, ஜீவா ஆகியோர், தினேஷ் கூட்டாளிகளான ராஜா உள்ளிட்டவர்களால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி, ஜீவா கொலை தொடர்பாக மேலும் 3-க்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x