Published : 21 Dec 2019 04:59 PM
Last Updated : 21 Dec 2019 04:59 PM

மழைக்காக வாக்குப்பதிவை ஒத்தி வைக்கக்கூடாது: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

மழைக்காக வாக்குப்பதிவை நிறுத்தக்கூடாது என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித்தேர்தலில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய நடமுறைகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் இந்த உள்ளாட்சித்தேர்தலில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அதில், குறிப்பிட்ட சில அம்சங்கள் வருமாறு:

*தீ விபத்து, வாக்குச்சாவடியில் கலகம் போன்ற காரணங்களால் வாக்குப்பதிவை ஒத்தி வைக்கலாம். ஆனால், மழை பெய்தல், காற்று வீசுதல் போன்ற காரணங்களுக்காக வாக்குப்பதிவை எக்காரணத்திற்காகவும் ஒத்தி வைக்கக்கூடாது.

மேலும், அங்கு ஏதாவது ஒரு கலகமோ அல்லது வெளிப்படையான வன்முறையோ ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்த போலீஸார் உதவியை உடனே வாக்குச்சாவடி அலுவலர்கள் நாட வேண்டும். கலகம் நீடித்து வாக்களிப்பை தொடர்ந்து நடத்துவது அறவே இயலாதென்று கருதினால் மட்டுமே வாக்குப்பதிவை ஒத்தி வைக்க வேண்டும்.

இதுபோன்ற பதட்டமான, அசாதாரண காலங்களில் வாக்குப்பெட்டிகளை முறைப்படிமூடி அரசுக்கு முத்திரையிட்டு காப்புறுதி செய்து வாக்குப்பதிவு அடுத்தப்படியாக அறிவிக்கப்படும் நாளில் நடைபெறும் என்பதை முறைப்படி அங்குள்ளோருக்கு அறிவிக்க வேண்டும்.

தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குச்சாவடியில் நடந்த கலகத்தை தெரிவித்து அவர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*வாக்குச்சாவடிகளில் யாராவத வாக்குச்சீட்டை வலுக்கட்டாயமாகவோ, மோசடியாகவோ எடுத்து செல்ல முயன்றாலோ அல்லது அதற்கு உதவி செய்தாலோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படுவார்.

*ஒரு வாக்காளர் வாக்குசீட்டுகளில் முத்திரையிட்டப்பின்னர் மற்றவர்களிடம் அதை காட்டினாலோ அல்லது யாருக்கு வாக்காளித்துள்ளார் என வாக்குச்சாவடிக்குள் மற்றவர்களுக்கு தெரிவித்தாலோ அது வாக்குப்பதிவு ரகசியத்தை மீறுவதாகும். அவ்வாறு ஒருவர் செய்தால் அந்த வாக்குச்சீட்டுகளை திரும்பப் பெற்று அதன் பின்புறத்தில் ‘வாக்குப்பதிவு நடைமுறை மீறப்பட்டது, ரத்து செய்யப்பட்டது’ என்று எழுதி கையேழுத்திட வேண்டும்.

இவருக்கு மீண்டும் வாக்குச்சீட்டினை கண்டிப்பாக வழங்கக்கூடாது. அதுபோல், ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க வந்து வாக்களிக்க விரும்பவில்லை என முடிவெடுத்தால் அவர் அவ்வாக்குச்சீட்டினை வாக்குச்சாவடித் தலைமை அலுவலரிடம் திரும்ப வழங்கலாம்.

அவ்வாறு திரும்ப பெறப்படும் வாக்குச்சீட்டுகள் பின்புறத்தில் ‘திரும்ப வழங்கப்பட்டது-ரத்து செய்யப்பட்டது’ என வாக்குச்சாவடி தலைமைஅலுவலர் பதிவு செய்திட வேண்டும். இந்த ரத்து செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தனி முறையில் போட்டு முத்திரையிட வேண்டும்.

*மரணமடைந்த, காணாமற்போன மற்றும் போலியான வாக்காளர்கள் பற்றிய விவரங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் தம்முடன் கொண்டு வர வாய்ப்புள்ளது. வேட்பாளர் அல்லது அவரின் தேர்தல் தேர்தல் முகவர் இதைப்போன்ற விவரங்களை உங்களிடம் வழங்கலாம். அதில், இடம்பெற்ற ஒருவரின் பெயர் மீதே வேறொருவர் வாக்களிக்க வரும்பட்சத்தில் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் காணப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர்கள் கவனமாக அதை பரிசீலிக்க வேண்டும்.

*வாக்காளர்கள் வசதிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்துவது குறித்து யாராவது புகார் ஏதேனும் எழுத்து மூலம் அளித்தால் அதை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மண்டல அலுவலர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x