Last Updated : 21 Dec, 2019 02:23 PM

 

Published : 21 Dec 2019 02:23 PM
Last Updated : 21 Dec 2019 02:23 PM

ஆட்சியே போனாலும் சரி; குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன்: நாராயணசாமி உறுதி

ஆட்சியே போனாலும் சரி; குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் என முஸ்லிம்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சுதேசி பஞ்சாலை அருகே இன்று (டிச.21) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான்குமார், சிவா உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமையை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக கண்டனப் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தாலும் சரி, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த விடமாட்டோம்.

தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு செயல்படுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x