Published : 21 Dec 2019 12:46 PM
Last Updated : 21 Dec 2019 12:46 PM

கீழடி மண்பாண்டங்கள்; தமிழி எழுத்துகள்: ஊட்டியில் களைகட்டும் சாக்லேட் திருவிழா

சாக்லேட்டுகளால் செய்யப்பட்ட கீழடி மண்பாண்டங்கள்

உதகை

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் சாக்லேட் திருவிழா தொடங்கியுள்ளது.

120 கிலோ சாக்லேட்டால் உருவான 2020 வடிவம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோ செடி வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் 20°C வெப்பநிலையில் வளரும் தன்மை உடையது என்பதைச் சுட்டிக்காட்டதான் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

120 கிலோ சாக்லேட்டால் உருவான 2020 வடிவம்

சாக்லேட் என்றாலே குழந்தைகள் துள்ளிக் குதிப்பார்கள். ஊட்டி 'ஹோம் மேடு' சாக்லேட்டுக்கு எப்போதும் மவுசு அதிகம். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இவற்றை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஆண்டுதோறும் சாக்லேட் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சாக்லேட் திருவிழா ஊட்டியில் இன்று (டிச.21) தொடங்கியது. ஜனவரி 5-ம் தேதி வரை15 நாட்கள் நடைபெறும் இந்த சாக்லேட் திருவிழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடத்தப்படுகிறது.

இதில் 120 கிலோ சாக்லேட்டைக் கொண்டு தயாரிக்கபட்ட 2020 வடிவிலான சாக்லேட் உருவம், கீழடியில் கிடைத்த பழங்கால மண்பாண்டங்கள் வடிவில் உருவான சாக்லேட்டுகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும், பழங்கால எழுத்துகளான பிராமி, தமிழி போன்ற எழுத்துகள் எழுதியிருந்தது முத்தாய்ப்பாக இருந்தது.

சாக்லேட்டுகளால் செய்யப்பட்ட கீழடி மண்பாண்டங்கள்

இதைத் தவிர மூங்கில் அரிசி, தினை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட 8 வகை தானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாக்லேட்டுகளை சுற்றுலாப் பயணிகள் ருசித்து வாங்குகின்றனர். ஒரு கிலோ 300 ரூபாய் முதல் கிலோ 3,500 ரூபாய் வரை விலை கொண்ட சாக்லேட் வகைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சாக்லேட் திருவிழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் வாங்கியும் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x