Published : 21 Dec 2019 11:15 AM
Last Updated : 21 Dec 2019 11:15 AM
சாகித்திய அகாடமி விருது பெற்ற முதுபெரும் தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான டி. செல்வராஜ் நேற்றிரவு மதுரையில் காலமானார். அவருக்கு வயது 82.
பொதுவுடைமை சிந்தனையாளரான டி. செல்வராஜ் என்றழைக்கப்படும் டேனியல் செல்வராஜ் இதுவரை 200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். தேநீர், மூலதனம், தோல், மலரும் சருகும் உள்ளிட்ட 6 நாவல்களையும் தாழம்பூ, ஊர்க்குருவியும் பருந்தும், கிணறு உள்ளிட்ட 7 சிறுகதைத் தொகுப்புகளையும் அவர் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை தோற்றுவித்த முக்கிய தலைவர்களில் ஒருவர். அவரது தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அவரது படைப்புகளில் முக்கியமான படைப்பாக தேநீர், 80களில் விரிவாக பேசப்பட்ட நாவல். இந்நாவல் 'ஊமை ஜனங்கள்' என்ற பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.
செல்வராஜ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த டி. செல்வராஜ் நேற்றிரவு மதுரையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வந்தார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று திண்டுக்கல்லில் நடக்க உள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT