Published : 20 Dec 2019 02:39 PM
Last Updated : 20 Dec 2019 02:39 PM

அமமுக வேட்பாளர்களை அதிமுகவினர் மிரட்டுகின்றனர்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

‘‘அமமுக வேட்பாளர்களை அதிமுகவினர் ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மிரட்டுகின்றனர்’’ என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனையின் நிமித்தமாக மதுரை வந்த செய்தியாளர்களை சந்தித்தபோது, "அமமுக நிர்வாகி அசோகன் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை நியாயமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

உயிரிழந்த அமமுக அசோகன் கட்சியில் ஈடுபாட்டுடன் இருந்தார். அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலருக்கு 97 சதவீதமும் சதவீதமும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு 96 சதவீதமும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தலில் நிச்சயம் மக்கள் வெற்றியைத் தருவார்கள். ஊராட்சி மன்றத்தில் அமமுகவினர் பல்வேறு இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் அமமுக வேட்பாளர்களுக்கு அதிமுக தரப்பில் பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. எந்த எதிர்ப்புகள் வந்தாலும் துணிச்சலோடு உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வோம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல வேட்பாளர்களை விலைக்கு வாங்க வெளிப்படையாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல. காலில் விழுந்து ஓட்டு கேட்க வேண்டும் என கூறும் செல்லூர் ராஜூ வாக்காளர்களின் காலை வாராமல் இருக்க வேண்டும்.

அடுத்த தேர்தலில் அமமுகவுக்கு பொதுச்சின்னம் நிச்சயம் கேட்போம்.

மாணவர்கள். அனைத்து சமூகத்தினர் போராட்டத்தை தொடர்ந்து மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்கு செல்ல மாட்டார்கள். இலங்கைப் போரின் போது திமுகவின் நடவடிக்கை குழப்பத்தை ஏற்படுத்தியது. எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்ற அடிப்படையில் திமுக செயல்படுகிறது.

மசோதாவிற்கு எதிரான வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அமமுகவில் பதவியில் இல்லாதவர்களே அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவின் அச்சுறுத்தலால் சிலர் சேர்கின்றனர். அமமுக கட்சியே இல்லை என்றும், தினகரன் தனி மரம் என்றும் சொல்கிறவர்களும் எதற்கு அமமுகவினரை அதிமுகவில் இணைக்க நினைக்கின்றனர். அமமுக தொடங்கியது அதிமுகவையும். ஜெயலலிதாவின்ஆட்சியை மீட்கும் ஜனநாயக ஆயுதம் தான். பதவி அதிகார பலமும், பண பலத்தையும் வைத்து ஆட்சியை நடத்திவருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) மதுரை அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி ச.அசோகன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அமமுக வேட்பாளர்களை அதிமுகவினர் ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மிரட்டுகின்றனர் என்று தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x