Published : 20 Dec 2019 02:29 PM
Last Updated : 20 Dec 2019 02:29 PM
உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைத் தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை தடை விதிக்கக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ''கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் திட்டம், ஜனவரி 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே, இந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதியே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, இத்திட்டத்தைச் செயல்படுத்த போதிய கால அவகாசம் இருக்கும் நிலையில், தற்போது, வருவாய்த் துறை அதிகாரிகள், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதால், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசுத் திட்டத்தைத் தள்ளிவைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT