Published : 20 Dec 2019 10:29 AM
Last Updated : 20 Dec 2019 10:29 AM

போராடும் மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது: ரஜினிக்கு சீமான் கண்டனம்

ரஜினிகாந்த் - சீமான்: கோப்புப்படம்

சென்னை

வன்முறை செய்தது யார் என்பதை நடிகர் ரஜினிகாந்த் முதலில் சொல்ல வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்துக்குப் பின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற தென்மாநிலங்களிலும் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், "எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினியின் கருத்தை சீமான் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில், "பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதை விட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x