Published : 20 Dec 2019 08:42 AM
Last Updated : 20 Dec 2019 08:42 AM

கருவுற்ற பெண்கள் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் வருவது தமிழகத்தில் முற்றிலும் தடுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

கருவுற்ற தாய்மார்கள் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் வருவது தமிழகத்தில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி இதைத் தொடங்கிவைத்தார்.

மருத்துவ வசதிகள்

இதையடுத்து நடத்தப்பட்ட உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு கூட்டத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் ஆர்.செல்வம், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் டீன் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி இந்நிகழ்ச்சியில் பேசியதாவது:

தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையாலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமும்எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

அரசு மருத்துமனைகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு போதிய அளவில் மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்கள் மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் வருவது என்பது துரதிஷ்டமானது. தற்போது, இந்த சூழ்நிலை மாறியுள்ளது. தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் வருவது என்பது தமிழகத்தில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகள்

இதில், மருத்துவர்களின் பணி மகத்தானது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். வழக்கமாக நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் நீங்கள் வந்து,உங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும், ஆதார் அட்டை, சாதிசான்றிதழ்கள் வழங்குவது குறித்து விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தி, வழங்கிட நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமபந்தி விருந்து

நிகழ்ச்சியின் நிறைவாக நடைபெற்ற சமபந்தி விருந்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன் ஜெயந்தி மற்றும் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x