

அடுத்த 24 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
''கடந்த 24 மணிநேரத்தில் தரங்கம்பாடியில் இரண்டு சென்டிமீட்டர் மழையும், மதுரை மாவட்டம் புள்ளிப்பட்டியல் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, பூமத்திய ரேகை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசுவதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 24 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும்’’.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.