Last Updated : 18 Dec, 2019 09:33 PM

 

Published : 18 Dec 2019 09:33 PM
Last Updated : 18 Dec 2019 09:33 PM

குடும்ப வறுமையால் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை: மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதி

குடும்ப வறுமையால் இரண்டு குழந்தைகளுக்கு அரளி விதை அரைத்துக் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார். ஒரு குழந்தை உயிரிழந்தது. மற்றொரு குழந்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சேலம், அம்மாபேட்டை, பஜார் தெருவைச் சேர்ந்த தறித் தொழிலாளி சங்கர்(35). இவரது மனைவி கவிதா(30). இவர்களுக்கு திவ்யஸ்ரீ (12), ஸ்ரீமதி (6) ஆகிய இரண்டு குழந்தைகள். நேற்று வீட்டில் இருந்து சங்கர் வேலைக்குச் சென்று விட்டார். இந்நிலையில், மாலை வெகுநேரமாகியும் வீடு திறக்காமல் மூடியிருந்ததால், அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.

அப்போது, இரண்டு குழந்தைகளுடன், கவிதா வாயில் நுரை தள்ளுபடி மயங்கிக் கிடந்துள்ளார். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவனைக்குச் செல்லும் வழியில் கவிதா உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், திவ்யஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தார். ஸ்ரீமதிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணையில், சங்கருக்குப் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் சிரமத்துடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. சங்கர் ரூ.2 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கிய நிலையில், கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவதியுற்று வந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்களும் வீட்டுக்கு வந்து சங்கரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த கவிதா அரளி விதையை அரைத்து இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுசம்பந்தமாக அம்மாபேட்டை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x