Last Updated : 18 Dec, 2019 04:44 PM

 

Published : 18 Dec 2019 04:44 PM
Last Updated : 18 Dec 2019 04:44 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பது ஏன்? - உள்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்

மதுரை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க மறுப்பது ஏன் என்பது தொடர்பாக உள்துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தனு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்தின் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இதனால் அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்கும் வரை ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்ய வழக்குத் தொடர்ந்தேன்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரவிச்சந்திரனுக்கு 30 நாட்களுக்குக் குறைவாக பரோல் வழங்கத் தயாராக இருப்பதாக சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு மாத பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் இருப்பதால் பரோல் வழங்க மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயாஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்கியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ரவிச்சந்திரனுக்கும் ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வில் இன்று (டிச.18) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் மகனுக்கு 30 நாட்களுக்குக் குறைவாக விடுப்பு கோரினால் வழங்கலாம் என நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், ரவிச்சந்திரன் பரோல் கோரிய விண்ணப்பத்தை நிராகரிக்கக் காரணம் என்ன? ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கலாம் என தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில் பரோல் மனுக்களை நிராகரிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இது தொடர்பாக தமிழக சிறைத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x