Published : 18 Dec 2019 01:15 PM
Last Updated : 18 Dec 2019 01:15 PM

வரும் 23-ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

வரும் டிச.23-ம் தேதி சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திட திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.18) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்:

"நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்எஸ்எஸ் வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ கடந்த 9-12-2019 அன்று மக்களவையிலும், 11-12-2019 அன்று மாநிலங்களவையிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.

இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும். 1955 ஆம் ஆண்டே இந்தியாவுக்கான குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதப் பிரச்சினையுமின்றி நிலவி வந்த அமைதிக்கு, இப்போது குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பாஜக அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது. மதவாதக் கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவற்றுள் ஒன்று.

இந்த சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முத்தலாக் தடைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, காஷ்மீரில் ஜனநாயக குரல்வளையை நெரித்தல், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பாஜக அரசு.

இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை பாஜக அரசு துளியும் மதிக்கவில்லை. டெல்லி ஜாமியா - உத்தரப்பிரதேச அலிகார் பல்கலைக்கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது.

மாணவர்களை ரத்த வெள்ளத்தில் தள்ளி, அதன்பிறகும் கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் மாணவர்களின் அறவழிப்போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகப் பங்கேற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள் ஓர் அணியில் சேர வேண்டிய தேவையையும் அவசர அவசியத்தையும் வலியுறுத்தும் முற்போக்கு அடையாளமாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில்; வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு லட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். பாகிஸ்தான்-வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த திருத்தச் சட்டம், இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பாஜக அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அதிமுக ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத்துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது.

மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான் காரணம் என்கிறபோது, பாஜக அரசின் கைப்பாவையாக அடிமை அதிமுக கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு, இந்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அதன்படி வாக்களித்தோம் என மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அதிமுக எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமுவந்து எப்படியெல்லாம், தலையாட்டி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து, பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. வடகிழக்குமாநிலங்களிலும் டெல்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்திய பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்சரும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது அருணாசலப்பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார்.

பல நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067-க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும், இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பாஜக அரசு மேற்கொள்ளவிருக்கும் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப்படுத்திக் கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.

ஏற்கெனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர்.

இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் அமைதி நிலவ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அதிமுக அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திடுவது என அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாக தீர்மானித்துள்ளது"

என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x