சிபிஐ அதிகாரி எனக் கூறி காட்பாடியில் பணம் பறித்ததாக இருவர் கைது

சிபிஐ அதிகாரி எனக் கூறி காட்பாடியில் பணம் பறித்ததாக இருவர் கைது
Updated on
1 min read

காட்பாடியில் சிபிஐ அதிகாரி எனக் கூறி போலியாக பலரை மிரட்டி பணம் பறித்ததாக, இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘காட்பாடியில் இரண்டு பேர் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி பலரை மிரட்டி பணம் பறித்து வருவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் துரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அதன்படி, விருதம்பட்டு கழிஞ்சூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு வீட்டில் காவல் துறையினர் நுழைந்து நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு, ஐபிஎஸ் அதிகாரியின் சீருடை மற்றும் போலியாக சிபிஐ அதிகாரி என்று அச்சிடப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விருதம்பட்டு நேதாஜி நகரைச் சேர்ந்த ஷேக் மதீன் (43), கழிஞ்சூரைச் சேர்ந்த அரிகரன் (28) ஆகியோரை கைது செய்தனர்.

இருவரும் மேல்விஷாரம் அருகேயுள்ள தனியார் ஷூ கம்பெனியில் உணவகம் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது.

ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என ஆசையில் சீருடையில் புகைப்படம் எடுத்து அதை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தங்களை ஐபிஎஸ் அதிகாரி என்றும் சிபிஐ அதிகாரி என்றும் பலரிடம் கூறி வந்துள்ளனர். இவர்கள், யாரிடமாவது மோசடி செய்து பணம் பறித்துள்ளார்களா? என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in