Published : 17 Dec 2019 08:31 PM
Last Updated : 17 Dec 2019 08:31 PM

சிலை கடத்துவோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கக் கோரி வழக்கு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சிலை கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தொல்லியல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புராதன மற்றும் கலைப் பொக்கிஷங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் படி, சிலை கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதேபோல் அச்சட்டத்தின் 26-வது பிரிவின்படி மத்திய அரசின் அதிகாரி மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர உத்தரவிடக் கோரி சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 531 சிலை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1125 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுவரை சிலை கடத்தலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனையானது குறைவானது. 100 ஆண்டுகள் பழமையான கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளைக் கடத்துபவர்களுக்கான சிறைத் தண்டனையைக் குறைந்தபட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை அதிகரிக்க வேண்டும்.

தொல்லியல் துறையில் போதுமான அதிகாரிகள் இல்லாத காரணத்தால் கடத்தப்பட்ட சிலைகளைப் பறிமுதல் செய்வது, வழக்குகள் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை ஆய்வாளர் அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரிகள் மேற்கொள்ள உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x