Published : 17 Dec 2019 11:51 AM
Last Updated : 17 Dec 2019 11:51 AM
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அம்மசோதா சட்டமாகியது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், இதனை கொண்டு வந்த பாஜக அரசையும், அதற்கு ஆதரவளித்த அதிமுகவையும் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் டிச.17-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திமுக மகளிரணியினர் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.
ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இச்சட்டம் இருப்பதாக குற்றம்சாட்டி, பாஜக, அதிமுகவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை திமுகவினர் எழுப்பினர். மதச்சார்பின்மை, சம உரிமை ஆகியவற்றை இச்சட்டம் தகர்த்திருப்பதாகவும், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்திருப்பதாகவும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.
அதேபோன்று, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT