Last Updated : 10 May, 2014 09:33 AM

 

Published : 10 May 2014 09:33 AM
Last Updated : 10 May 2014 09:33 AM

சிபிஐ கூடுதல் இயக்குநராக செயல்பட அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அரச்சனா ராமசுந்தரம் அப்பதவியில் செயல் பட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி யான அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரை அப்பதவியில் நியமித்தது தவறு என்று தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அவர் சிபிஐ கூடுதல் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்தகவல் அறிந்ததும் தமிழக அரசு அவரை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. தமிழக அரசின் அனுமதியின்றி அவர் சிபிஐ அதிகாரியாக பொறுப்பேற்றிருப்பதாகக் கூறி தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் பட்னாயக், கே.எஸ்.ராதா கிருஷ்ணன், எஸ்.எஸ்.நிஜ்ஜார் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

“சிபிஐ இயக்குநர் பதவியில் நியமிக்க குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழு பரிந்துரைக்கும் ஒருவரைத்தான் இயக்குநராக நியமிக்க வேண்டும். அக்குழு அர்ச்சனாவின் பெயரை பரிந்துரைக்கவில்லை. நேரடியாக அவரை நியமித்தது செல்லாது” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், “சிபிஐ இயக்குநர் பதவிக்குத்தான் அத் தகைய நிபந்தனை உள்ளது. கூடுதல் இயக்குநர் பதவிக்கு அப்படிப்பட்ட நிபந்தனை இல்லை. இரண்டு பதவிகளுக்கும் நியமன நடைமுறையில் சிறிது வேறுபாடு உண்டு” என்று வாதிட்டார்.

“அர்ச்சனா பெயர் தேர்வுக்குழுவின் பட்டியலில் பரிந்துரைக்கப்படவில்லை. அரசின் நேரடியான தேர்வாக தெரிகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிகிறது. எனவே அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x