விரைந்து முடிவெடுப்பதில் கலாம் வல்லவர்: முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் பெருமிதம்

விரைந்து முடிவெடுப்பதில் கலாம் வல்லவர்: முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் பெருமிதம்
Updated on
1 min read

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள உமாபாரதி அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன் பேசியதாவது:

அப்துல் கலாமுடன் நான் 34 ஆண்டுகாலம் பழகியிருக்கிறேன். அவர் டி.ஆர்.டி.ஓ-வில் பணியாற்றியபோது ஐதராபாத்தில் இருந்தார். அப்போது எங்களது படிப்புக்கான திட்டத்துக்கு (புராஜக்ட்) அவர்தான் வழிகாட்டியாக இருந்தார். எங்கள் திட்டத்துக்காக ஒரு சாதனத்தை அவர் தந்தார். ஆனால் அது திட்டத்துக்கு ஏற்புடையதாக இல்லை. அதை அவரிடம் தெரிவித்தபோது, உடனடியாக ஐதராபாத் வரச்சொன்ன அவர், ரூ.1லட்சத்து 50 ஆயிரம் வழங்கி ஏற்புடைய சாதனத்தை வாங்கச் சொன்னார். விரைவில் முடிவுகளை எடுக்கும் வல்லமையைக் கொண்டவர் கலாம்.

அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது ரேடார் தொழில்நுட்பம் பற்றி எனக்கு பாடம் எடுத்துள்ளார். அப்போது நான் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தேன். மேலும், அவரது பதவிக் காலம் முடிவடைந்த போது, அண்ணா பல்கலைக்கழகம் அழைத்து வந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர் எஸ்.வி.ராஜசேகர், வளரும் அறிவி யல் இதழின் ஆசிரியர் ஈ.கே.டி.சிவகுமார், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து, கலைமகள் இதழின் ஆசிரியர் சங்கர சுப்ரமணியன், உமாபாரதி அரங்கின் உரிமையாளர் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in