

கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அரசு இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த 75 மாணவர்களுக்கு அரசு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. தற்போது விடுபட்ட மாணவர்களுக்கு பள்ளிகளில் மடிக்கணினி வழங்கப்பட்டுவருகிறது.
இதேபோல் தங்களுக்கும் அரசின் இலவச மடிக்கணினி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று அரசு பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் பேசி மடிக்கணினி வழங்க ஏற்பாடுகள் செய்வதாக உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் கலைந்துசென்றனர்.
இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.