Published : 16 Dec 2019 02:59 PM
Last Updated : 16 Dec 2019 02:59 PM

பொன்.மாணிக்கவேல் ஆவணங்களை அளிக்க 2 வாரங்கள் அவகாசம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

பொன்.மாணிக்கவேல் ஆவணங்களை அளித்ததில் சில முக்கிய ஆவணங்களை அளிக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்து அதையும் அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேலுக்கும், சிலை கடத்தல் தொடர்பான தகவல்களை அளிக்கவில்லை என தமிழக அரசுக்கும் உரசல் ஏற்பட்டது.

பொன்.மாணிக்கவேல் ஐஜி பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு நவ.30 ஓய்வு பெற்றதை அடுத்து அவரை சிறப்பு அதிகாரியாக நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த நவ.30-ம் தேதியுடன் ஓராண்டு பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து பொன்.மாணிக்கவேலை தமிழக அரசு விடுவித்து ஆணை பிறப்பித்தது. ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு உயர் அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்க உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்றம் சொன்னால்தான் ஒப்படைப்பேன் என பொன்.மாணிக்கவேல் பிடிவாதம் பிடிக்க, பணி ஓய்வு பெற்ற பின்னரும் வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பொன்.மாணிக்கவேல் வழக்கின் ஆவணங்களை ஒப்படைக்கவில்லை.

இதனையடுத்து அவருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு , சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதோடு, அது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் விளக்க அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது,

பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , “சிலை கடத்தல் வழக்கு தொடர்பான 17,754 பக்க ஆவணங்களை ஒப்படைத்து விட்டோம். அதற்கான விளக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ வழக்கு தொடர்பான ஆவணங்களில் சில சான்றிதழ்கள் இல்லை. குறிப்பாக, தொன்மையான சிலைகள் குறித்த சான்றிதழ்கள் இல்லை. எனவே அது தொடர்பாக விசாரிக்க வேண்டும். அதை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் ” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதிகள் அனைத்து ஆவணங்களையும் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்து, ஆவணங்களை ஒப்படைக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x