Published : 15 Aug 2015 05:37 PM
Last Updated : 15 Aug 2015 05:37 PM
பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பிபீடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), பி.எஸ்சி. (ரேடியோதெரபி டெக்னாலஜி), பி.எஸ்சி. (கார்டியோ பல்மோனரி பெர்பியூஷன் டெக்னாலஜி), பி.எஸ்சி. (ஆப்டோமேட்ரி), பிஓடி ஆகிய 9 பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு 2014-15ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 20,940 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் தகுதியான 20,130 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 17-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறாது. இதுதொடர்பாக மேலும் விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT