Published : 16 Dec 2019 09:32 AM
Last Updated : 16 Dec 2019 09:32 AM

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: பொன் மாணிக்கவேல் அறிவிப்பு

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல், கடந்த நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வு பெற்று விட்டார். சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை கொடுக்க மறுப்பதாக, பொன் மாணிக்கவேல் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தாக்கல் செய்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், பொன் மாணிக்கவேல் சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.

அதில் பொன் மாணிக்கவேல் கூறியிருப்பதாவது:சிலைக் கடத்தல் தொடர்புடைய 17 ஆயிரத்து 790 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டேன். ஆனாலும் எனக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசத்தை எனக்கு வழங்கவில்லை. தீய நோக்கத்துடனும் நியாயமற்ற முறையிலும் அலைக்கழிக்கும் நோக்கத்தில் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல் சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் அளிக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தை, உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெறும்போது தமிழக அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x