Published : 16 Dec 2019 09:17 AM
Last Updated : 16 Dec 2019 09:17 AM

தமிழகத்தில் விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் 5,308 பேர் விண்ணப்பிப்பு: முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்க ஊழியர் சங்கம் கோரிக்கை

விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 50 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான, பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே, இந்நிறுவனத்தை, எம்டிஎன்எல் நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், இவ்விரு நிறுவனங்களையும் சீரமைக்கவும், 4ஜி சேவையை வழங்கவும், விருப்ப ஓய்வூத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக, ரூ.68,751 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ் கடந்த நவ.4-ம் தேதி முதல் இம்மாதம் 3-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மொத்தம் 1.53 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். இதன்படி, விருப்ப ஓய்வுபெற தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், சென்னையில் மிக அதிகபட்சமாக 2,671 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 78,569 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 50 சதவீதம் ஆகும்.

விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு இதுவரை பணியாற்றிய ஆண்டுகளுக்கு, ஓர் ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் வீதமும், மீதமுள்ள பணி ஆண்டுகளுக்கு ஓர் ஆண்டுக்கு 25 நாட்கள் வீதமும் ஊதியம் வழங்கப்படும். விருப்ப ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வரும் ஜன.31-ம் தேதிக்குள் அனைத்து பணப்பலன்களும் வழங்கப்பட்டு விடும்.

இதற்கிடையே, விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் - என்எப்டிஇ மூத்த துணைத் தலைவர் சி.கே.மதிவாணன் கூறும்போது, “கடந்த 19 ஆண்டுகளாக விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ளவர்கள் அவர்கள் ஓய்வு பெறும் தினத்துக்கு முந்தைய நாள் வரை கூட தங்களது முடிவை வாபஸ் வாங்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருப்ப ஓய்வு திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்வு செய்வதற்கு மட்டும் ஒவ்வொரு ஊழியருக்கும் இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதை வாபஸ் பெற ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. எனவே, பிஎஸ்என்எல் நிர்வாகம் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x