Published : 14 Dec 2019 09:32 AM
Last Updated : 14 Dec 2019 09:32 AM

திருச்சியை சேர்ந்தவரிடம் ஆபாச வீடியோக்களை பெற்ற 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்க போலீஸார் முடிவு: சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் குறித்து தகவல் தர அழைப்பு 

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததால் கைது செய்யப் பட்டுள்ள திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபரிடமிருந்து மெசஞ்சர் மூலமாக ஆபாச வீடியோக்களை பெற்றுவந்த 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி மாநகர சமூக ஊடகப் பிரிவு போலீஸார் கடந்த 11-ம் தேதி சமூக வலைதளங்களை கண்காணித்துக் கொண்டிருந்தபோது, முகநூலில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு ஆபாச படங்களை ஒருவர் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்தபோது இப்படங்களை பதிவேற்றம் செய்பவர், திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போக்ஸோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களின் கீழ் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிறிஸ்டோபர் அல்போன்ஸை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, முகநூல் மட்டுமின்றி மெசஞ்சர் மூலமாக தினமும் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு இதுபோன்ற ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்ததாகக் கூறினார். அதன்பேரில் இவரிடமிருந்து ஆபாசப் படங்களைப் பெற்று, பார்த்தவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, “ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய கிறிஸ்டோபர் அல்போன்ஸ் தனது செல்போனை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். எனவே, அதைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும், மெசஞ்சர் வழியாக இவரிடமிருந்து தினமும் ஆபாசப் படங்களை பெற்று வந்தவர்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அவர்களில் 30 பேர் வரை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். சமூக வலைதளங்களில் யாராவது ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்வது, பதிவேற்றம் செய்வதில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்தலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x