

உள்ளாட்சித்தேர்தல் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பில் விளக்கம் கேட்டு திமுக தரப்பில் செய்த முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் கடந்த 11-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக தி.மு.க தரப்பில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
தி.மு.க தரப்பு அபிஷேக் சிங்வி , “ உத்தரவில் உள்ள irrespective என்ற வார்த்தை தொடர்பாக விளக்கம் வேண்டும். ஏனெனில் கடந்த 11-ம் தேதி உத்தரவில் 2011 சென்சஸ் படி தேர்தல் நடத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு தொடர்பான எண்ணிக்கை குறித்து கணக்கில் கொள்ள தேவையில்லை என கூறப்பட்டுள்ளது என முறையிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி திமுக தரப்பு கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்தார். மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை, மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழக அரசு தரப்புக்கு ஆஜரான வழக்கறிஞர் ரோஹத்கி தி.மு.க. அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்றும் தேர்தலை நிறுத்த முற்படுகிறார்கள் என வாதிட்டார், அதை அப்போது நம்பவில்லை. ஆனால்தற்போது அவருடைய வாதத்தை நம்பவேண்டிய சூழல் உருவாகிவிடுமோ என கருத்து தெரிவித்தார்.
தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.