போட்டித்தேர்வு மூலம் 32 மாவட்ட நீதிபதிகள் விரைவில் நேரடியாக தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவிப்பு

போட்டித்தேர்வு மூலம் 32 மாவட்ட நீதிபதிகள் விரைவில் நேரடியாக தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:மாவட்ட நீதிபதி பதவியில் 32 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத்தேர்வு மார்ச் மாதத்திலும், அதைத்தொடர்ந்து முதன்மை எழுத்துத்தேர்வு ஜூன் 2-வது வாரத்திலும், வாய்மொழித்தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படும்.

மாவட்ட நீதிபதி பதவிக்கு இளங்கலை சட்டம் (பி.எல்.) படித்திருக்க வேண்டும். 2009-2010-ம்ஆண்டு அல்லது அதற்கு பின்னர்சட்டம் படிப்பை முடித்தவராக இருந்தால் பார் கவுன்சில் நடத்திய அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தமிழ்நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநில பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டும். வழக்கறிஞர் பணியில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதோடு தற்போது வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கும், பிசி, எம்பிசி பிரிவினருக்கும் 35 முதல் 45 வரை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 35 முதல் 48 வரை. உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in அல்லது www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜனவரி 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்கள்...

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 காலியிடங்களில் 6 இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டநீதிபதி பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியான இளங்கலை சட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதிபெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in