Published : 13 Dec 2019 09:59 AM
Last Updated : 13 Dec 2019 09:59 AM

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: சிறப்பு பேருந்துகள் குறித்து விரைவில் ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்செல்வது வழக்கம். தெற்கு ரயில்வே அறிவிக்கும் சிறப்பு ரயில்களுக்கு, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் தீர்ந்து விடுகின்றன. இதையடுத்து, பெரும்பாலான மக்கள் பண்டிகை நாட்களில் ஊருக்கு செல்ல அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளையே நம்பியுள்ளனர். ஆங்கில புத்தாண்டு தொடங்கியவுடன், ஜனவரி மாதம் 14-ம் தேதி போகி பண்டிகை (செவ்வாய் கிழமை), 15-ம் தேதி தைப் பொங்கல், 16-ம் தேதி திருவள்ளூவர் தினம், 17-ம் தேதி உழவர் தினம் வருகிறது.

தமிழகத்தில் 300 கி.மீ தூரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அடுத்தமாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

www.tnstc.in இணையதளம் மட்டுமல்லாமல், www.redbus.in. www.busindia.com, www.makemytrip.com, www.paytm.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்கு பயணம் செய்ய தற்போது சிலர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த 2 வாரங்களுக்கு பிறகு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டில் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அதன்பிறகு, சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x