Published : 13 Dec 2019 09:30 AM
Last Updated : 13 Dec 2019 09:30 AM

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் கிராமத்தில் 4,700 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: தொழில்நுட்ப குழுவினர் ஆய்வுக்கு பிறகு இறுதி முடிவு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் கிராமத்தில் 4,700 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே விமான நிலைய அதிகாரிகள் ஆரம்பகட்ட ஆய்வு செய்துள்ள நிலையில் இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் தொழில் நுட்பக் குழுவினர் விரைவில் பரந்தூர் வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் பகுதிகளில் தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையம் நெரிசல் மிகுந்த விமான நிலையமாக உள்ளது. இதனால் 2-வது விமான நிலையம் சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே மதுராந்தகம் பகுதியிலும், மாமண்டூர் பகுதியிலும் விமான நிலையங்கள் அமைக்க இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பின்னர் அந்த இடங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலைய அதிகாரிகள் சிலர் வந்து திடீர் ஆய்வு செய்துள்ளனர். சுமார் 4,700 ஏக்கர் பரப்பில் விமான நிலையம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளதால், அதற்கு போதுமான அளவு இடங்கள் உள்ளனவா? எவ்வளவு இடம் அரசிடம் உள்ளது, தனியாரிடம் எவ்வளவு இடம் கையகப்படுத்த வேண்டி யுள்ளது என்பது தொடர்பாக இந்த ஆய்வின்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

சாத்தியக் கூறுகள் அதிகம்

இவர்கள் அடையாளம் கண்டுள்ள 4,700 ஏக்கரில் 50 சதவீத இடம் அரசுக்கு சொந்தமானதாக உள்ளதாகவும், மீதம் தனியாரிடம் இருந்து கையப்படுத்த வேண்டி இருக்கும் என்றும் ஆய்வின் போது தெரிய வந்துள்ளது. அரசிடம் பாதி அளவு இடங்கள் இருப்பதால், இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்திய விமான நிலையங்கள் ஆணையரகத்தின் தொழில்நுட்பக் குழுவினர் வந்து ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரிவில் உள்ள முக்கிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "விமான நிலைய அதிகாரி கள் பரந்தூர் பகுதியில் ஆய்வு செய் துள்ளனர். இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இன்னும் ஆய்வு செய்ய வில்லை. அவர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கிய பிறகே நிலம் கையகப் படுத்துவது குறித்து விமான நிலைய ஆணையரக அதிகாரிகள் அரசிடம் கோரிக்கை வைப்பர். அதன் பின்னர் நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்போம்” என்றார்.

பரந்தூர் மக்கள் எதிர்ப்பு

இந்தச் சூழ்நிலையில் தங்கள் பகுதி யில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். தங்கள் பகுதி விவசாய விளைநிலங்கள் அதிகம் உள்ள பகுதி என்றும், இங்கு விமான நிலையம் அமைந்தால், விவசாயம் பாதிக்கப் படும். விவசாயத்தை நம்பியே நாங் கள் உள்ளோம். நிலம் கையகப்படுத் தப்பட்டால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே விமான நிலையம் அமைக்க தங்களின் நிலங்களைத் தர முடியாது என்றும் பரந்தூர் கிராம மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x