Published : 12 Dec 2019 01:36 PM
Last Updated : 12 Dec 2019 01:36 PM

மேட்டுப்பாளையம் விபத்து தொடர்பான வழக்கு: நில உரிமையாளரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை

மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளரை எதிர்மனுதாரராகச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து சுற்றுச் சுவர் எழுப்பிய நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (டிச.12) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள தீண்டாமைச் சுவர்களைக் கண்டறிந்து அகற்ற வேண்டும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தீண்டாமைச் சுவர் எனக் கூறப்படும் அந்தச் சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா எனவும், சுற்றுச்சுவர் கட்டப்பட்டபோது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் எழுப்பக் கூடாது என விதிகள் ஏதும் இருந்ததா எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராகச் சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 24 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x