

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தை நிரந்தரமாகப் பாதுகாக்கக் கோரி நவம்பர் 1-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் 'ஷோ'வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புராதானச் சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்கக் கூடாது. குப்பை போடுவதைக் குற்றமாக்கி குறைந்தபட்சம் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று (டிச.12) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.