Published : 12 Dec 2019 11:51 AM
Last Updated : 12 Dec 2019 11:51 AM

நீதிமன்றங்களே வியக்கும் மதுரை அரசு காசநோய் மருத்துவமனை: வழக்குகளில் விதிக்கும் அபராதத் தொகையை வழங்கி கவுரவம் 

மதுரை

மதுரை தோப்பூர் காசநோய் மருத் துவமனையின் சேவையை அறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி கள், வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை மருத்துவ மனையின் மேம்பாட்டுக்கு கிடைக்கச் செய்ததன் மூலம் தனியார் மருத்துவமனையைவிட வியக்கத்தக்க வகையில் மேம்பாடு அடைந்துள்ளது.

மதுரை அருகே தோப்பூரில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது. நோய் முற்றி இறக்கும் தருவாயில்தான் காச நோயாளிகளைச் சிகிச்சைக்கு சேர்க்கிறார்கள். ஒரு காலத்தில் புதர்மண்டிக் கிடந்த இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதற்கே அச்ச மடைந்தனர். மக்கள் நடமாட்டம், போக்குவரத்து வசதியில்லாத இடத்தில் இந்த மருத்துவமனை இருந்ததால் காட்டாஸ்பத்திரி என்றே மக்கள் அழைத்தனர். நோயாளிகளுக்கு குடிநீர், படுக்கை வசதி இருக்காது. கழிவறை வசதி மிக மோசமாக இருந்தது.

2012-ல் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடந்தார். மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில், மருத்துவர் காந்திமதிநாதன் இந்த மருத்துவமனை அதிகாரியாகப் பொறுப்பேற்றார். அவரது முயற்சியால் தோப்பூர் காசநோய் மருத்துவமனை புதுப்பொலிவு பெறத் தொடங்கியது. என்எஸ்எஸ், என்சிசி மாணவர்களைக் கொண்டு புதர்கள், செடி கொடிகளை அகற்றினார்.

மருத்துவமனையை மேம்படுத்த அரசு வழங்கும் நிதி போதாது என்பதால் தோப்பூர் அருகே சிட்கோ தொழிற்சாலைகளின் உதவியை நாடினார். யாரிடமும் நிதியாகப் பெறாமல் மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்ய வைத்தார்.

காச நோயாளிகளுக்குச் சுத்தமான காற்றுதான் முதல் சிகிச்சை என்பதால் வனத் துறை உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் 3,000 மரக்கன்றுகளை நட்டார். தற்போது அவை மரங்களாக வளர்ந்து பசுமை வளாகமாக மாறி பறவைகளின் சரணாலயமாக மாற்றமடைந்துள்ளது. நோயாளி களுக்கு தற்போது வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

மருத்துவமனை வளாகம் நட்சத்திர விடுதிக்கு நிகராக மாறியதோடு, சிகிச்சையிலும் தனியார் மருத்துவமனையைவிட ஒரு படி மேலாக உள்ளது. மருத்துவமனையின் சேவை நீதிபதிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிபதிகளே நேரடியாக வந்து பார்த்து பிரமித்து இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களைப் பாராட்டினர்.

மேலும், நீதிபதிகள் சில வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை நேரடியாக இந்த மருத்துவமனைக்கு நன்கொடையாகச் செலுத்த நடவ டிக்கை எடுத்தனர். அந்தத் தொகை மருத்துவமனை மேம்பாட் டுக்குச் செலவிடப்படுகிறது. ஓர் அரசு மருத்துவ மனையின் மேம் பாட்டுக்கு அபராதத் தொகையைச் செலுத்தச் சொல்லும் இந்த நிகழ்வு, தமிழக நீதிமன்ற வரலாற்றில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.

இது குறித்து தோப்பூர் மருத்துவ மனை மருத்துவர்கள் கூறியதாவது:

2017-ம் ஆண்டு ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையாக முதல் முறையாக சென்னை உயர் நீதிமன்றம் ரூ.39 ஆயிரம் அபராதம் விதித்து அதை மருத்துவமனை மேம்பாட்டுக்கு நன்கொடையாகச் செலுத்த உத்தரவிட்டது. அதே ஆண்டு ஜூலை 5-ல் ரூ.25 ஆயிரமும், 2018 ஆக.22-ல் ரூ.72 ஆயிரமும், 2019 நவ. 5-ல் ரூ.10 ஆயிரமும் அபராதத் தொகைகளை தோப்பூர் மருத்துவமனைக்குச் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டன.

அபராதம் விதிக்கப்பட்டோரும் தொகையை மருத்துவமனைக்கு வந்து செலுத்தி அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்று நீதிமன்றதில் ஒப்படைத்தனர்.

சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு, குவாரி நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து அந்தத் தொகையை தோப்பூர் மருத்துவமனைக்கு வைப்பு நிதியாகச் செலுத்த உத்தரவிட்டனர்.

காசநோய் மருத்துவமனையை மேம்படுத்த நீதிபதிகள் மேற்கொண்டு வரும் முயற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x