மகாகவி பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

மகாகவி பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
Updated on
1 min read

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி பாரதியார் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பாரதியாரைப் போற்றி பதிவிட்டுள்ளார். தமிழில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மகாகவி பாரதியார் என்று அழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளன்று அவரை நினைவுகூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நமக்கு எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.

சுப்பிரமணிய பாரதி நீதி, சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றுக்கும் மேலாக நம்பினார். ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in