Published : 12 Dec 2019 09:40 AM
Last Updated : 12 Dec 2019 09:40 AM

பாரதியாரின் 138-வது பிறந்தநாள் விழா; பல்லக்கு ஊர்வலத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

தமிழ் வளர்ச்சி, செய்தி விளம்பரம், சுற்றுலாத்துறை, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் 138-வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகிலிருந்து பாரதியார் நினைவு இல்லம் வரை ஜதி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, க.பாண்டியராஜன், எம்எல்ஏ நடராஜ், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை

பாரதியாரின் 138-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, க.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத் தினர்.

மேலும், வானவில் பண்பாட்டு மையம், தமிழ் வளர்ச்சி மற்றும் கலை, பண்பாட்டுத் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை, சுற்றுலாத் துறை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில் பாரதி திருவிழா கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நேற்று, ‘நிமிர்ந்த நன்னடை’ என்ற பெயரில் 3,500 மாணவ, மாணவியர் பங் கேற்ற நடைபயணம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் பி.துரைசாமி நடை பயணத்தைத் தொடங்கிவைத்தார்.

வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாகச் சென்ற நடைபயணம், திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து பார்த்தசாரதி கோயில் முகப்பில் இருந்து பாரதியார் நினைவு இல்லம் வரை ஜதி பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கிவைத்தார். இதில் அமைச்சர் க.பாண்டிய ராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x