Published : 11 Dec 2019 08:03 PM
Last Updated : 11 Dec 2019 08:03 PM

பிஎட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம்: அரசு உத்தரவுக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

பிஎட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம் என்ற அரசின் உத்தரவுக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புடன் பிஎட் முடித்தவர்களே கடந்த காலங்களில் ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் பணியிடங்களும் குறைக்கப்பட்டன. உபரி ஆசிரியர்களும் அதிகரித்ததால் ஆசிரியர் பணி கிடைப்பது குதிரை கொம்பாக மாறியது.

இதையடுத்து கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்தோர் பிஎட் படிக்காமல் போட்டித் தேர்வுகளில் ஆர்வம் காட்டினர். இதனால் பிஎட் சேர்க்கை குறைந்தது. மேலும் பி.இ முடித்தோருக்கும் வேலைவாய்ப்பு குறைந்தது. இதனால் அவர்களை பிஎட் படிப்பில் சேர 2015-16-ல் அரசு அனுமதி வழங்கியது. அவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடும் வழங்கப்பட்டன.

ஆனால் பிஎட் பொறியியல் பட்டதாரிகளை கடந்த ஆண்டு ‘டெட்’ எழுத அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் பிஎட்டில் சேர தயக்கம் காட்டினர். இதையடுத்து பி.எட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் ‘டெட்’ எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்ச்சி அடைந்தால் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக நியமிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.சங்கர் கூறியதாவது: ஏற்கனவே டெட்டில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக 35 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசின் உத்தரவு வேடிக்கையாகயும், வேதனையாகவும் உள்ளது.

மேலும் பிஎட் முடித்த 4 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். பொறியியல் படிப்பில் உள்ள சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்குள் போன்ற பாடப் பிரிவுகள் பள்ளிகளில் கிடையாது.

அவர்கள் எப்படி பள்ளி ஆசிரியராக நியமிக்க முடியும் என தெரியவில்லை. பிஎட் முடித்த பொறியியல் பட்டதாரிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கணிதப்பாடம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதற்காக பிஇ கணிதமும், பிஎஸ்சி கணிதமும் சமம் என அரசு கூறியுள்ளது. பிஎஸ்சியில் கணிதமே முழு பாடத்திட்டமாக இருக்கும். ஆனால் பிஇ படிப்பில் கணிதம் ஒரு பகுதியாக மட்டுமே வரும். ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உபரி என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக கல்வித்தகுதி இருந்தும் 4 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கவில்லை.

இந்நிலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பள்ளி ஆசிரியர் பணி என்ற உத்தரவு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x