Published : 11 Dec 2019 05:12 PM
Last Updated : 11 Dec 2019 05:12 PM

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார், குறைகளைத் தெரிவிக்க டோல் ஃப்ரீ, வாட்ஸ் அப் எண்கள் அறிமுகம்: மதுரை ஆட்சியர் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார், குறைகளைத் தெரிவிக்க டோல் ஃப்ரீ, வாட்ஸ் அப் எண்களை மதுரை ஆட்சியர் அறிவித்தார்.

ஊரகம் மற்றும் கிராம அளவில் வரும் 27 மற்றும் 30-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

மதுரையில் மூன்றாவது நாளாக இன்று (புதன்கிழமை) ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதுவரைக்கும் மாவட்ட பஞ்சாயத்து வார்டுக்கு வேட்புமனு தாக்கல் ஆகவில்லை. பஞ்சாயத்து யூனியன் வார்டுக்கு 2 வேட்புமனுக்கள் வந்துள்ளன. கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 39 வேட்புமனுக்களும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 139 வேட்புமனுக்களும் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 180 வேட்புமனுக்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன.

ஊரகப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 2032 வாக்குச்சாவடிகளில் 515 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறிந்துள்ளோம்
வாக்குச்சாவடிகளில் தண்ணீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகிறோம். குறைகள் இருந்தால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேர்தல் பணியில் 16567 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு துறை ரீதியாக தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 14-ம் தேதி தேர்தல் தொடர்பாக முதல் பயிற்சியும் வரும் 21-ம் தேதி 2-வது பயிற்சியும் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ப்ளாக்கிலும் பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.

பாதுகாப்புப் பணியில் 750 பேர் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு யூனியன் , கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஒரு காவலர் என்ற ரீதியிலும் பதற்றமான இடங்களில் 2 காவலர்கள் என்றளவில் நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தையைப் பொருத்தவரை 2 யூனியனுக்கு ஒரு பறக்கும் படை அமைத்து அதை 3 ஷிஃப்ட்களில் இயங்கும் வகையில் செயல்படுத்தவுள்ளோம். ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க, சந்தேகங்களைத் தீர்க்க 18005992123 என்ற கட்டணம் இல்லா எண்ணைப் பயன்படுத்தலாம். மேலும், 73395 32327 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் பயன்படுத்தலாம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீமிங் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x