Published : 10 Dec 2019 11:33 AM
Last Updated : 10 Dec 2019 11:33 AM
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து முதல் நாளான நேற்று ஒரேநாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப்பின் 1996-ல் முழுமையாக நடந்த உள்ளாட்சித்தேர்தல் என்றால் அது 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில்தான். இந்நிலையில் 2016-ம் ஆண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தது.
கடந்த வாரம் தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த புது அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. டிச.27, 30 தேதிகளில் இரண்டுக்கட்டங்களாக தேர்தல் எனவும், டிச. 9 முதல் வேட்பு தாக்கல் ஆரம்பம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 9 மாவட்டங்கள் தவிர எஞ்சிய தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் மனு தாக்கல் செய்ய 16-ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ம் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் இறுதித் தேதி டிச.19-ம் தேதி ஆகும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 3,217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2834 பேரும், கிராம ஊராட்சித்தலைவர் பதவிக்கு 333 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும் என மொத்தம் 3217 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT