

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது எந்த அச்சத்தில் என தெரியவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான சென்னை, கமலாலயத்தில் இன்று (டிச.10) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு சிறந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக பாராட்டினார்.
"உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது எந்த அச்சத்தின் காரணமாக என என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை. தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என மக்கள் விருப்பப்படுகின்றனர். முறைப்படி நடத்தியிருந்தால், 2016-ம் ஆண்டிலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது" என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.