

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநிலம் முழுவதும் முதல் நாளான நேற்று 3,217 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக மீத முள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து இதற்கான அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இதன்படி, இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.
வரும் டிச.16-ம் தேதி மனுத்தாக்கல் நிறைவடைகிறது. இதன்படி முதல்நாளான நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 2,834 பேரும் கிராம ஊராட்சி தலைவருக்கு 333 பேரும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 3 பேரும் என மொத்தம் 3,217 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதனை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.