Published : 09 Dec 2019 08:08 PM
Last Updated : 09 Dec 2019 08:08 PM

'யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே உங்கள் நோக்கம்: முதல்வர் பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

"'குழப்பங்களின் கோபுரத்தில்' நின்று கொண்டு “நாங்கள் தேர்தலை நடத்தத் தயார்” என்று முதல்வர் கூறி, எங்கள் தலைவர் மீது வீண் பழி சுமத்துவது 'கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்' கூச்சலாக மட்டுமே இருக்க முடியும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று வெளியிட்ட அறிக்கை:

“ திமுக தேர்தலைக் கண்டு பயப்படுகிறது என்றும், மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் எங்கள் தலைவர் என்றும் நா கூசாமல் பேட்டி ஒன்றே அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

“உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் செய்து”, “உள்ளாட்சித் தேர்தலில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு எல்லாவற்றிலும் குழப்பம் செய்து” ,“ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி தேர்தல் நிதிக்குக் கொள்ளையடிக்க முடியுமா” என்று 'அரசியல் ஆதாயத்தை' மட்டுமே அடிப்படைச் சொத்தாக வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கு எங்கள் கட்சித் தலைவர் பற்றி கேள்வி எழுப்ப எவ்வித தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை.

திமுக என்ன கேட்கிறது? “உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி, சட்ட நெறிமுறைகளின் படி நடத்துங்கள்” என்று மட்டுமே கோரிக்கை வைத்துள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அவசரக் கோலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எவ்வித சட்ட நெறிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றாமல் 'குழப்பங்களின் கோபுரத்தில்' நின்று கொண்டு “நாங்கள் தேர்தலை நடத்தத் தயார்” என்று முதல்வர் கூறுவது பொய் என்பது நேற்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானத்தில் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதில் சொல்ல வழியில்லாத முதல்வர், எங்கள் தலைவர் மீது வீண் பழி சுமத்துவது 'கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவோரின்' கூச்சலாக மட்டுமே இருக்க முடியும், கொள்கை ரீதியிலான அல்லது சட்ட ரீதியிலான வாதமாக நிச்சயம் இருக்க முடியாது.

வார்டு மறுவரையறை என்று ஒரு ஆணையத்தை நியமித்து, அதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மாவட்ட ரீதியாகக் கொடுத்த ஆட்சேபனை மனுக்களை எல்லாம் கிடப்பில் போட்டு 'வார்டு மறு வரையறை' ஆணை வெளியிட்டது யார்?

குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மாவட்டங்களைப் பிரித்தது யார்? அரசியல் சட்டப்படியான இட ஒதுக்கீடு பற்றி ஆணை வெளியிடாமல் குழப்பம் செய்வது யார்?

“மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அரசியல் சட்டம் அளித்துள்ள கட்டளைகளை நிறைவேற்ற அரசால் முடியாது” என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்த பிறகும், அவசர அவசரமாக - அரசியல் கட்சிகளைக் கூட கலந்து பேசாமல் - இட ஒதுக்கீடு வெளியிடாமல் மீண்டும் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது யார்?

எல்லாவற்றுக்குமே இதுவரை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிச்சாமி காரணம் என்று நினைத்திருந்தோம். இப்போது மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்கிறார் என்றால், அந்தப் பழனிச்சாமிக்காக இந்தப் பழனிசாமிதான் மாநிலத் தேர்தல் ஆணையத்தை சட்டவிரோதமாகச் செயல்பட வைத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

'யாராவது நீதிமன்றத்திற்குச் சென்று தடை பெற வேண்டும்' என்பது மட்டுமே தொடக்கத்திலிருந்து முதல்வரின் நோக்கமாக இருக்கிறது. அதிலும் ஊரக உள்ளாட்சிக்கு மட்டுமே தேர்தல் என்ற அறிவித்ததிலும் 'ஊழல்' மூலம் தேர்தலுக்கு நிதி திரட்டும் உத்தியும் ஒளிந்து கிடக்கிறது. அதனால்தான் தேர்தல் நிதி திரட்ட ஊழல் செய்வதற்கு திமுக அனுமதி மறுக்கிறதே என்ற கோபத்தில் எங்கள் கட்சித் தலைவர் மீது ஏதேதோ 'புலம்பல்களை'யும், 'பொய்களை'யும் கற்பனை உலகில் இருந்து கொண்டு அவிழ்த்து விடுகிறார் முதல்வர்.

ஆனால், முதல்வர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு என்று பஞ்சாயத்து ராஜ் சட்டம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட உள்ளாட்சி சட்டங்கள், சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி நடத்த முன்வராத அதிமுக அரசையும், மாநிலத் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்துத்தான் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று வழக்குத் தொடுக்கிறது திமுக.

முதல்வர் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு உள்ளாட்சித் தேர்தல் ஒன்றும் அதிமுகவின் உள்கட்சித் தேர்தலும் இல்லை, எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்குக் காரணமான 'கூவத்தூர்' தேர்தலும் அல்ல.

ஆகவே, “உள்ளாட்சித் தேர்தலை அரசியல் சட்ட கட்டளைப்படி இந்த அரசு நடத்த முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதே மாநிலத் தேர்தல் ஆணையரும், குறைந்தபட்சம் உள்ளாட்சித் துறை அமைச்சரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் முதல்வர் மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

அதை விடுத்து திட்டமிட்டு, சதிசெய்து உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டிட மூன்று வருடங்களாக ஒவ்வொரு குழப்பத்தையும் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த சட்டப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் கட்சித் தலைவர் பற்றி குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கட்சித் தலைவர் சொல்லித் திருந்தவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மனதில் வைத்தாவது உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்துவதற்கு முதல்வர் 'மனம் திருந்த வேண்டும்' என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x