Published : 09 Dec 2019 03:22 PM
Last Updated : 09 Dec 2019 03:22 PM

ஒருவாரத்தில் ஆவணங்களை ஒப்படைத்து அறிக்கை தாக்கல் செய்யுங்கள்: பொன். மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சம்பந்தப்பட்ட ஆவணங்களை தமிழக அரசிடம் ஒரு வாரத்திற்குள் பொன்.மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்ததற்கான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை ஒப்படைக்காத முன்னாள் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''ஒரு அதிகாரியின் பணி நீட்டிப்புக் காலம் முடிந்தவுடன் அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம்.

ஆனால், சிலை கடத்தல் வழக்கை விசாரித்த முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தனது பணி நீட்டிப்புக் காலம் முடிந்தும் வழக்குத் தொடர்பாக எந்தொவொரு ஆவணத்தையும் இதுவரை ஒப்படைக்கவில்லை. மேலும் பணி நீட்டிப்புக் காலம் முடிந்த பின் ஒரு நாள் கூட வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கையில் வைத்திருக்கக் கூடாது, முடியாது. எனவே ஆவணத்தை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், ஒரு வாரத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஆவணங்களை ஒப்படைத்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

முன் கதை:

பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாகப் பணியாற்றினார். ஊடக வெளிச்சம் அவர்மீது அதிகம் பட்ட நிலையில் ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற அவரை ரயில்வே துறைக்கு தமிழக அரசு மாற்றியது. அவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்பாகப் பார்க்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் பொன்.மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராகப் பேட்டி அளிப்பதாகவும், உயர் அதிகாரிகளை மதிக்காமல் தனது இஷடத்துக்குச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். அவரை சிறப்பு அதிகாரியாக உயர் நிதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது. தொடர்ந்து பொன். மாணிக்கவேல் மோதல் போக்கிலேயே செயல்படுவதாகவும், ரிப்போர்ட் எதையும் மேலதிகாரிகளுக்கு அனுப்புவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்துக்கு மட்டுமே ரிப்போர்ட் அளிப்பேன் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 30-ம் தேதி அன்று பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆவணங்களை உயர் அதிகாரியான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமர் சிங்கிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. பொன்.மாணிக்கவேல் அதற்கு மறுப்பு தெரிவித்து நான் நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் கொடுப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் , ''ஒருவருடைய பதவிக் காலம் முடிவடைந்தவுடன் ஆவணங்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதி. ஒத்துழைக்க முடியாது, ஆவணங்களை வழங்க முடியாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும். ஆகவே, ஆவணங்களை பொன்.மாணிக்கவேல் உடனடியாக மேலதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

இதையடுத்தும் பொன்.மாணிக்கவேல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. ஆனாலும் அவர் தராமல் இருக்கவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும், ஆவணத்தை ஒப்படைத்ததற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x