Published : 09 Dec 2019 02:48 PM
Last Updated : 09 Dec 2019 02:48 PM

கனிமொழி தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கனிமொழியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், “கனிமொழி தனது வேட்பு மனுவில் தனது கணவரின் வருமான வரிக் கணக்கு எண் குறித்த விவரங்களைக் கொடுக்கவில்லை என்றும் அதனைத் திட்டமிட்டு அவர் மறைத்துள்ளார், இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அடிப்படை முகாந்திரம் இல்லாத இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கனிமொழி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செயப்பட்டது. ஆனால் கனிமொழியின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இதையடுத்து கனிமொழி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது

கனிமொழி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவரது வாதத்தில், “ கனிமொழியின் கணவரின் வருமான வரி எண் கொடுக்கவில்லை எனவும் இது தகவல் மற்றும் உண்மையை மறைப்பதாகும் என சந்தானகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.

ஆனால், கனிமொழியின் கணவர் வெளிநாட்டுக் குடிமகன். அவரிடம் வருமான வரி நம்பர் இல்லை. அதாவது பான் எண் (PAN Number) இல்லை. அப்படி இருக்கையில் தகவலை எப்படி மறைத்ததாகக் கூற முடியும். எனவே அவரது குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் கனிமொழி வெற்றிக்கு எதிராக நடைபெறும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

ஆனால் நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே எதிர் மனுதாரரான சந்தானகுமார் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பததாகவும், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x