

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி அடுத்த சிவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் மெகினன் (2). இவர்களின் வீட்டின் அருகே கழிப்பறை கழிவுநீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கழிப்பறை பயன்பாட்டில் இல்லாத நிலையில், தொட்டியில் தண்ணீர் தேங்கி இருந்தது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சிறுவன் மெகினன் வீடு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் தொட்டியில் விழுந்தார். இதனை அறியாத பெற்றோர் வீட்டின் அருகில் பல்வேறு இடங்களில் தேடினர். தொட்டியின் உள்ளே பார்த்த போது குழந்தை மெகினன் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் போலீஸார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.