Published : 09 Dec 2019 11:20 AM
Last Updated : 09 Dec 2019 11:20 AM
தமிழகம் யாரால் சீரழிந்தது என, குருமூர்த்தி சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திராவிட கட்சிகளால் தான் தமிழகம் சீரழிந்தது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (டிச.8) சென்னை விமான நிலையத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த சீமான், "தமிழகம் யாரால் சீரழிந்தது என குருமூர்த்தி சொல்ல வேண்டியதில்லை. எல்லோருக்கும் தெரியும். இத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்திருக்கிறது.
இங்கு இருக்கும் ஊழல், லஞ்சம், வளக்கொள்ளை, கச்சத்தீவு பறிபோனது, ஸ்டெர்லைட் ஆலை, அணு உலை, மீத்தேன் திட்டம், நதிநீர் உரிமை பறிபோனது எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டியது அந்த கட்சிகள் தான். ஆட்சியில் இருந்தவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதனால், குருமூர்த்தி அவ்வாறு சொல்லியிருப்பார்" என சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT