Published : 09 Dec 2019 08:55 AM
Last Updated : 09 Dec 2019 08:55 AM

பைக் ரேஸை தடுக்க கண்காணிப்பு தீவிரம்: மக்களும் தகவல் தெரிவிக்கலாம்

பைக் ரேஸை தடுக்கும் வகையில் மெரினா, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலை பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீஸார் கூறியுள்ளார்.

சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உட்பட பல முக்கியச் சாலைகளில் இளைஞர்கள் சிலர் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பைக் ரேஸில் ஈடுபடுபவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

பைக் ரேஸில் ஈடுபடுவோரை கைது செய்யவும் சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் உத்தரவிட்டார். அதன்படி, போக்குவரத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினமும் நேற்றும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x