Last Updated : 08 Dec, 2019 07:31 PM

 

Published : 08 Dec 2019 07:31 PM
Last Updated : 08 Dec 2019 07:31 PM

ரஜினி வாய்க்கு சர்க்கரை போடவேண்டும்: ப.சிதம்பரம்

காரைக்குடி

‘‘2021-ல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய ரஜினி வாய்க்கு சர்க்கரை போட வேண்டும்,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடி வந்த ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் நாள்தோறும் பொருளாதாரம் சிதைந்து வருகிறது. நாட்டில் கற்பழிப்பு கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது .சமுதாயத்தில் அமைதியும் இல்லை பொருளாதாரத்தில் வளர்ச்சியும் இல்லை.

இதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் அரசு குற்றமாகக் கருதுகிறது. இதுபற்றி பேசினால், எழுதினால், சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டால் அரசு எதிர்க்கிறது. இதனால் ஊடகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அச்சம் ஏற்பட்டுளது.

விரும்பாத மொழி, கருத்து, சாப்பாடு குறித்து பேசினால் தேசவிரோதம் என்கின்றனர். இந்த சர்வாதிகாரப் பாதை மேலும் பொருளாதார சிதைவை ஏற்படுத்தும். ஹரியானாவில் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. மஹாராஷ்டிராவில் அவர்களது கனவு தவிடு பொடியாகிவிட்டது. ஜார்க்கண்டில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல பிழைகள் உள்ளன. விதிமீறல் குறித்து திமுக, காங்கிரஸ் கூறி வருகிறது. ‘பொருளாதாரம் தெரியாதவர் நிதியமைச்சராக உள்ளார்,’ என்று சுப்பிரமணிசாமி கூறிய கருத்து சில நேரங்களில் சரியாக தான் உள்ளது. சோனியகாந்தி குடும்பத்தின் பாதுகாப்பு மக்களிடமும், கடவுளிடமும் விடப்பட்டிருக்கிறது.

தவறான பொருளாதாரக் கொள்கை, விலைவாசி, வேலையின்மை குறித்து டிச.14-ம் தேதி டில்லியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடக்க உள்ளது. சிறை அனுபவத்தை கட்டுரையாக எழுதி வருகிறேன் .

தமிழகத்தில் 2021-ல் அரசியல் மாற்றம் வரும் என கூறிய ரஜினி வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும்.

டெல்லி நூலில் தமிழக அரசு நடக்கிறது. தெலுங்கானாவில் நடந்தது என்கவுண்டரா ? உண்மையா? இல்லையா ? என்பதை தீவிர விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் தாமத செயல்பாட்டால் சட்டத்தின் மீதான அவநம்பிக்கை கூடிவிட்டது. அனைத்து அதிகார மையங்களும் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாடு நேர் பாதையில் செல்லும். மக்களுக்கும், பாஜகவுக்கும் தர்மயுத்தம் நடக்கிறது.

மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து அரசு ரூ.ஒன்னே முக்கால் லட்சம் கோடியை கட்டாயப்படுத்தி எடுத்துக் கொண்டனர். 800 கார்ப்ரேட் நிறுவன முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துவிட்டனர்.

இந்தப் பற்றாக்குறையை சரிசெய்ய பல லட்சம் கோடிக்கு வரிச்சுமையை ஏற்ற உள்ளனர். இதனால் விரைவில் ஜிஎஸ்டி உயரும்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x