Published : 08 Dec 2019 07:02 PM
Last Updated : 08 Dec 2019 07:02 PM

ஆலங்குளம் அருகே சிறுவர்கள் உட்பட 17 பேரை வெறிநாய் கடித்தது

பிரதிநிதித்துவப் படம்

ஆலங்குளம்

ஆலங்குளம் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் உட்பட 17 பேரை வெறிநாய் கடித்தது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவர், சிறுமிகளை விரட்டி விரட்டி கடித்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அபபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்களை காப்பாற்ற நாயை விரட்டினர். அவர்களையும் நாய் கடித்தது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர், நாயை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

நாய் கடித்ததில், சுஜின், காசிம், ராஜலிங்கம் உள்ளிட்ட 9 சிறுவர், சிறுமிகள் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும், ஆலங்குளம் சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாய் கடித்து 17 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது. வெறிநாயை பிடிக்கும் பணியில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடித்த நாயை பொது மக்களே அடித்துக் கொன்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x