Published : 08 Dec 2019 06:49 PM
Last Updated : 08 Dec 2019 06:49 PM

உள்ளாட்சித் தேர்தல்: திமுக ஆலோசனை; மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு முறை உரிய முறையில் கடைபிடிக்கப்படவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறை இல்லாமல் நடத்துவது, இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்துவது குறித்து ஆட்சேபிக்கப்பட்டது. இதையடுத்து 9 புதிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம், புதிய அறிவிப்பாணையை வெளியிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதாகவும், ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து முக்கிய அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. இதேபோன்று திமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடு, தேர்தல் நடத்தும் யுக்தி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x