Published : 08 Dec 2019 08:41 AM
Last Updated : 08 Dec 2019 08:41 AM

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ. தங்கபாலு, கார்த்தி சிதம்பரம் எம்.பி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 3 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி முதல் முறையாக நேற்று சென்னை வந்த அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்க பாலு, எம்.கிருஷ்ணசாமி, மக்க ளவை உறுப்பினர் கார்த்தி சிதம் பரம், அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவாக ப.சிதம்பரம் பேசியதாவது:

மத்திய பாஜக ஆட்சியில் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் வழக்கு தொடுக்கிறார்கள். கர்நாட கத்தில் இரு காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். 3-வது எம்.பி. பாஜகவில் இணைந்து விட்டார். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வலது கரம், இடது கரமாக செயல்பட்ட 2 எம்.பி.க்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். உடனே அவர்கள் பாஜகவில் இணைந்து விட்டனர்.

அநீதிக்கு வளைய மாட்டேன்

பாஜக என்பது, கங்கை நதியைப் போல. குளித்தவுடன் அனைத்து பாவங்களும் நீங்கி விடும். ஒரு நாளும் அந்த கங்கை நதியில் குளிக்க மாட்டேன். நீதிக்கு, நீதிபதிக்கு தலை வணங்குவேன். அநீதிக்கு வளைய மாட்டேன்.

2016 நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த பிறகு நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. டெல்லி காய்கறிச் சந் தையில் ஒரு கிலோ வெங்காயத் தின் விலை ரூ. 200. ஆனால், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.7-க்கு தான் கொள்முதல் செய்யப்படு கிறது. விலை உயர்வால் விவசாயி களுக்கு எந்தப் பலனும் இல்லை. இதனைதான் இனி நான் பேசப் போகிறேன். அனைத்து காங்கிரஸ் காரர்களும் பேச வேண்டும்.

மக்களுக்கு எதிரான யுத்தம்

நாட்டின் வளர்ச்சி 3.5 சதவீதம் என்று பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இருந்தால் தொழில்கள் வள ராது. வேலைவாய்ப்புகளும் உரு வாகாது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை எடுத்து அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடியை 800 முத லாளிகளுக்கு கொடுத்திருக்கிறார் கள். இதனால் பட்ஜெட்டில் துண்டு விழப் போகிறது. இதனை ஈடுகட்ட அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை 5-லிருந்து 8 சதவீதமாகவும், 8-லிருந்து 12 சதவீதமாகவும், 12-லிருந்து 18 சதவீதமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து ரூ.1 லட்சம் கோடி வரியாக எடுக்கப் போகிறார்கள். இந்திய மக்களுக்கு எதிராக இதைவிட பெரிய யுத்தத்தை யாரும் தொடங்க முடியாது.

நான் சிறையில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம்நபி ஆசாத், அகமது படேல், சசி தரூர் உள்ளிட்டோர் என்னைச் சந்தித்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த காங்கிரஸும் எனக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். காங்கிரஸ் என்ற மிகப்பெரிய இயக்கம் துணையாக இருக்கும்வரை என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

முன்னதாக நேற்று மாலை 3.30 மணி அளவில் சென்னைக்கு வந்த ப.சிதம்பரத்தை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்க ளவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:

பொருளாதார வீழ்ச்சி

2004 முதல் 2010 வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 8.5 சதவீத வளர்ச்சி இருந்தது. இடையில் 4 ஆண்டுகள் 9 சதவீத வளர்ச்சி இருந்தது. பாஜக ஆட்சியில் வளர்ச்சி என்பது 8 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதத்துக்கு வந்து விட்டது. 4.5 சதவீதம் என்பதுகூட தவறான புள்ளிவிவரம். வளர்ச்சி யைக் கணக்கிடும் முறையை மாற்றியிருக்கிறார்கள்.

மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் 3 சதவீத வளர்ச்சி தான் என்று கூறியிருக்கிறார். நாட்டின் பொருளாதார நிலைமை படுமோசமாக உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்தியா மீளவே முடியாது.

நான் நிதியமைச்சராக இருந்த போது, பெண்களின் பாதுகாப்புக் கான நிர்பயா நிதிக்கு ரூ.3 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கினேன். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங் கள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட நிர்பயா நிதியைப் பயன் படுத்தவில்லை. இது வருந்தத் தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் மீறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக் கிறார். அவருக்கு நீதிமன்றத் தீர்ப்பும் தெரியாது. நான் என்ன பேசினேன் என்பதும் தெரியாது.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x